சோறு கண்ட இடம் சொர்க்கம்.... அன்னாபிஷேகம் பற்றி அறிந்து கொள்வோம்....

சோறு கண்ட இடம் சொர்க்கம்.... அன்னாபிஷேகம் பற்றி அறிந்து கொள்வோம்....
ஆரூர் சுந்தரசேகர்.
    உலகில் வாழும் உயிர்களுக்கு அடிப்படை அன்னம்தான். உயிர்களைப் படைத்ததோடு மட்டுமல்லாமல் அவை உண்பதற்கான உணவையும் படைத்த இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று        எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் செய்விக்கப்படுகிறது.
             சிவபெருமான் அபிஷேகப்பிரியர் என்பதால்  பல பொருட்களைக் கொண்டு அவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.செய்யப்படும் அபிஷேகப் பொருள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் கிடைப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று சுத்த அன்னத்தால் ( அரிசி சாதம் ) சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது  மிகச் சிறப்பாகும்.
       அன்னாபிஷேகத்தில் சேர்க்கப்படும் ஒவ்வொரு அரிசியும் ஒரு லிங்கமாகக் கருதப்படுவதால் அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்வது என்பது கோடி லிங்கங்களை தரிசனம் செய்த பலன் கிட்டும்.
     ’சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பது பழமொழி. அதாவது இந்த அன்னாபிஷேகத்தை தரிசிப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம் இதனால்தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று கூறியுள்ளனர்.

வேதங்கள், உபநிடதங்களில் அன்னம்:
    அன்னத்தை பற்றி வேதங்களும், உபநிடதங்களும் கூறியுள்ளதைப் பற்றி பார்ப்போம்.
   அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னம் - அன்னமே இறை வடிவம். மஹேஸ்வரப் பெருமானே அன்னத்தின் வடிவத்தில் இருக்கின்றார். அன்னமே தானாக இருக்கின்றேன். என்று ஈசனே சொல்வதாக சாம வேதம் கூறுகிறது.
‘அன்னம் பிரஜாபிஸ்; சாக்ஷாத் அன்னம் விஷ்ணு சிவ’ -  அன்னமே பிரத்யட்சமான பிரம்ம சொரூபம்; விஷ்ணு சொரூபம்; சிவ சொரூபம்.
அன்னம் ந நிந்த்யாத் - அன்னத்தை நிந்தனை செய்யக் கூடாது.
"அன்னம் ஸ்வயம் பிராணா:' அன்னம்தான் ஜீவன்
அளி! அன்னம் அளி! ஓயாமல் அன்னம் அளி’ என்கிறது பவிஷ்ய புராணம்.

அன்னம் ஒரு பஞ்ச பூதம்:
      நாம் வசிக்கும் இந்த பிரபஞ்சம் நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு எனும் பஞ்ச பூதங்களால் ஆனது. 
     அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் என்ற திருமூலர் கூற்றுப்படி நமது உடலுக்கும் பஞ்சபூதங்களுக்கும் தலைவன் சிவபெருமான்.
       அந்தப் பஞ்சபூதங்களை ஒருமித்து செயல்பட வைத்து எல்லா உயிர்களுக்கும் உணவும் நீரும் குறைவின்றி கிடைக்க செய்த சிவபெருமானுக்கு நன்றி சொல்லும் வகையிலும் எக்காலத்திலும் உணவுப் பஞ்சம் வராமல் இருக்கவும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தினர்.
    அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் தான் உருவாகிறது. நிலத்தில் விதைக்கும் நெல், ஆகாயத்திலிருந்து பெய்யும் மழை நீரினால் வளர்ந்து, காற்றினால் கதிர்பிடித்து, சூரியனின் வெப்பத்தால் பால் இறுகி நெல் ஆகிறது.
     பின் நெல், உமி நீக்கப்பட்டு அரிசியான பிறகு, மண்ணால் ஆன பானையில் நீரில் போட்டு, காற்றின் உதவியால் எரியும் நெருப்பில் வெந்து, அன்னமாகி ஆகாயத்தின் கீழ் உள்ள எல்லா உயிர்களுக்கும் உணவாகிறது. 
     அந்த பஞ்ச பூதங்களால் உருவான அன்னம் அவற்றைப் படைத்த இறைவனுக்கே அர்ப்பணிக்கப்படுகின்றது. பிரபஞ்சத்தில் பஞ்ச பூதங்களால் உருவான அரிசி-அன்னம் எப்படி இறைவனுக்குப் போய்ச் சேருகின்றதோ அதேபோல பிரபஞ்சத்தில் பஞ்சபூதங்களை உள்ளடக்கிய உயிர்களும் ஒருநாள் இறைவனிடம் போய்ச் சேரவேண்டும் என்றால் அரிசி பக்குவப்பட்டு உணவாகி சேருமிடம் சேருவதுபோல் உயிர்களும் பக்குவப்பட்டு சேருமிடம் சேரவேண்டும் என்பதே அன்னபிஷேகத்தின் தத்துவம்.
      அன்னாபிஷேக தினத்தில் சிவனை வணங்கினால் பஞ்சபூதங்களை வழிபட்ட பலன்கள்  கிடைக்கும்.

ஐப்பசி மாத பௌர்ணமி - “அன்னாபிஷேக வழிபாடு”
        சிவபெருமானுக்கும், சந்திர பகவானுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு, ஒருமுறை சந்திரனின் மாமனார் தட்சனால் ஏற்பட்ட சாபத்தில் இருந்து மீள, சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான். சந்திரன் சிவபெருமானால் சாபம் நீங்க பெற்று, சிவபெருமானின் தலையில் பிறை சந்திரனை அணிகலனாக அணியப்பெறும் பாக்கியம் பெற்றான். எனவே தான் நமது புராணங்கள் சிவபெருமானை “பிறைசூடன், சந்திரசேகரன்” என்கிற பல பெயர்களில் சிவன் மற்றும் சந்திரனின் புகழை போற்றுகின்றனர்.
     சிவபெருமானின் அருளால் தனது முழு ஆற்றலையும் முழுமையாக சந்திரன் பெற்ற தினமே ஐப்பசி பவுர்ணமியாகும் அன்று சந்திரன் தனது அமிர்த கலையாகும் பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான். 
      சந்திரனை முடிசூடியவருக்கு, சந்திரன் முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சந்திரனுக்கு உரிய தானியமாகிய அரிசியை அன்னமாக்கி ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. சந்திரன் பெற்றது போலவே, நாமும் முழு ஆற்றலையும் அடையும் நோக்குடன் தான் ஐப்பசி பவுர்ணமி நாளில், சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபாடு செய்கிறோம்.

 அறிவியல் ரீதியாக ஐப்பசி பவுர்ணமி:
      ஆன்மிக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாகவும் ஐப்பசி பவுர்ணமிக்கு ஆதாரம் இருக்கிறது.
      அக்டோபர், நவம்பர் மாதங்களில் (ஐப்பசி)  சந்திரன் பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும், அப்போது சந்திரன் மிக அதிக ஒளியுடன் காட்சி தருவதாக அறிவியல் ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
    அதேபோல் ஆடிப்பட்டத்தில் விதைக்கப்பட்ட நெற்பயிர்கள் அறுவடையாகும் பருவகாலம் ஐப்பசி மாதம். அப்போது அந்த புதிய நெல்லைக் குத்தி அந்த அரிசி கொண்டு அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்பதால் அது வழக்கத்தில் உள்ளது.

அன்னாபிஷேகம் செய்யும் முறை:
     ஐப்பசி மாத முழுநிலவு நாளில் முதலில் ஐந்து வகைப் பொருட்களால் இறைவனுக்க அபிஷேகம் செய்து, பின்னர் நன்கு வடித்து ஆறவைத்த அன்னத்தைக் கொண்டு  அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. சமீபகாலமாக அன்னாபிஷேகத்தின் போது  காய்கறி, கனி வகைகளையும் கொண்டு அலங்காரம் செய்கிறார்கள். சிவலிங்கத் திருமேனியின் மேலிருந்து அன்னத்தை வைத்துக் கொண்டே வருவார்கள். 
     சிவலிங்கத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். கீழ்ப்பகுதி-பிரம்ம பாகம். 
நடுப்பகுதி- விஷ்ணு பாகம், இதுவே ஆவுடை. 
மேற்பகுதி பாணம்-சிவபாகம்.
   அன்னாபிஷேகத்தில் சிவலிங்கத் திருமேனியை மூடும் அளவுக்கு அன்னத்தை சாத்துவார்கள். 
   இந்த அன்னாபிஷேகம் மாலை 6 மணி முதல் இரவு 8 . 30 மணி வரை  அப்படியே வைக்கப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் வேத பாராயணமும், ருத்ரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணமும் நடைபெறும். அந்த நேரம் முடிந்த உடன் அன்னத்தை அகற்றி விடுவார்கள். பின்னர் மீதமிருக்கும் ஐந்து வகைப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும். பிறகு இறைவனுக்கு தீபாராதனைச் செய்யப்படும். தொடர்ந்து எடுத்த அன்னத்தை  தயிர் கலந்து பிரசாதமாக கொடுக்கின்றனர். இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.         
       மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப்படுகின்றது. எம்பெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகின்றது. நீர்நிலைகளில் அன்னம் கரைக்கப்படுவதால் ஊரில் விளைச்சல் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

 பஞ்சமில்லா வாழ்வு பெற கைப்பிடி அரிசி:
        சிவபெருமானுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்துக்கு நம்மால் முடிந்த அரிசியை வழங்குவோம். நாம் வழங்கும் அரிசியானது, சாதமாகி, சிவசொரூபனுக்கு உடையாகி, அலங்கரிக்கப்பட்டு, அந்த அன்னத்தைக் கொண்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக, உணவாக வழங்கப்படுவது நமக்கு மிகுந்த புண்ணியத்தைத் தரவல்லது.                                 
      அன்னாபிஷேகத்துக்கு கைப்பிடி அரிசியேனும் வழங்குவோம்; வாழ்வாங்கு பெறுவோம்.

அன்னாபிஷேக தரிசன பலன்கள்:
       அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்பது ஐதீகம்.   அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் தம்பதியர்கள் இணைபிரியாமல் வாழ்வார்கள். குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகள் அனைத்தும் தீரும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும். பித்ரு தோஷம் மற்றும் சாபங்கள் போன்றவையும் நீங்கும்.

அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்வோம் ! அளவற்ற புண்ணியம் பெறுவோம் !!

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...