மஹா சிவராத்திரி...விவரம் அறிவோமா...

மஹா சிவராத்திரி...விவரம் அறிவோமா...
- ஆரூர் சுந்தரசேகர்.


  மஹா சிவராத்திரி 2019 மார்ச் 4 ஆம் தேதி திங்கள் கிழமை அன்று  வருகிறது.
    எத்தனையோ இரவுகள் இருக்க மாசி மாதத்து தேய்பிறைச்   சதுர்த்தசி இரவு மட்டும் ஏன் மஹா சிவராத்திரி ஆனது? விவரம் அறிவோம்.
      மஹா சிவராத்திரி நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹா சிவராத்திரியின் மேன்மை, ஆகமவிதிகளை சிவமகா புராணம், ஸ்காந்தம், பத்மம், உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன.
   கந்த புராணத்தில்  மஹா சிவராத்திரி அன்று அடி,முடி காணமுடியாமல் நின்ற திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் லிங்கோற்பவ மூர்த்தியாக சிவன் காட்சி தந்ததாக கூறப்பட்டுள்ளது.
மஹா சிவராத்திரியை பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஊழிக்காலத்தில் உலகப் பிரளயத்தின் போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், பார்வதி  பரமேஸ்வரனை நினைத்து  மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் சிவபெருமானை இரவுப் பொழுதில்  நான்கு ஜாமங்களிலும்  ஆகம விதிப்படி பூஜைகள்  செய்தார். பூஜையின் முடிவில் ஈசன் அழிந்து போன உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார்.  அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூஜித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது ‘சிவராத்திரி’ என்றே கொண்டாட வேண்டும்’ என்று வேண்டினாள். சிவபெருமானும் அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அதன்படியே மஹா சிவராத்திரி சிறப்புற அனுஷ்டிக்கப்படுகிறது.

மஹா சிவராத்திரி தின பூஜையைக் கண்ட அசுரக் கூட்டம் தங்களையும் அறியாமல், ‘சிவ சிவ” என்று கூறினார்களாம். இதனால் அவர்கள் பாவங்கள் நீங்கி அவர்களுக்கு சாப விமோசனம் கிடைத்தது.
  மற்றுமொரு புராணக் கதையின் படி தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற திருப்பாற் கடலைக் கடைந்த போது எழுந்த ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் ‘திருநீலகண்டர்’ ஆக அருள் புரிந்தார். அவ்வாறு அருள் புரிந்த அந்நாளே மஹா சிவராத்திரி எனக் கூறுவர்.
  மார்க்கண்டேயன் உயிரை காக்க சிவன் எமனைக் காலால் உதைத்தார். அதன்பின் எமனை உயிர்ப்பிக்க தேவர்கள் வேண்டினர். அந்த நாளே மஹா சிவராத்திரி என்றும் கூறப்படுகிறது.
சிவராத்திரி விரதம் இருந்து தான் பிரம்மா, சரஸ்வதி தேவியை மனைவியாக பெற்றதுடன் உலக உயிர்களை படைக்கும் பதவியை அடைந்தார்.
சிவனை நோக்கி மஹா சிவராத்திரி அன்று பகவான் விஷ்ணு கடும் தவம் இருந்து அதன் பலனாக சக்தி வாய்ந்த சக்ராயுதத்தை பெற்றார் என்றும் ஒரு புராணக் கதையில் கூறப்படுகிறது.
  அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெற்றதும் இந்த மஹா சிவராத்திரியில் தான்.
இத்தனை மகிமைகள் கொண்ட மஹா சிவராத்திரி விரதத்தை, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு, ஆதிசேஷன், ஸ்ரீசரஸ்வதி முதலான கடவுளரும் மேற்கொண்டு சிவ தரிசனம் செய்து சிவனருளைப் பெற்றனர்!
மஹா சிவராத்திரி விரத வழிபாடு:
மஹா சிவராத்திரியன்று இரவுப்பொழுதில் நான்கு ஜாம காலங்களில் சிவலிங்க அபிஷேகம் செய்து அலங்கரித்து அர்ச்சனை,ஆராதனைகள் ஒவ்வொரு ஜாமத்திலும் செய்வார்கள்.

முதல் ஜாமத்தில்  ( இரவு 7.30 முதல் 9.30 மணி வரை ) முருகப்பெருமானை நடுவில் அமர்த்தி உமாதேவியும், சிவபெருமானும் காட்சிதரும் சோமாஸ்கந்தரை பின்வருமாறு பொருட்களை கொண் வழிபாடு செய்யவேண்டும்.
அபிஷேகம் - பஞ்சகவ்யம்
அலங்காரம் - வில்வம்
அர்ச்சனை - தாமரை, அலரி
நிவேதனம்- பால்அன்னம்,சக்கரைபொங்கல்
பழம் - வில்வம்
வஸ்திரம் – செம்பட்டு
வாசனைதிரவியம் - பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தனம்
தூபம்- சாம்பிராணி, சந்தனக்கட்டை
தீபம் - புஷ்பதீபம்
ரிக் வேதம், சிவபுராணம் ஓத வேண்டும்
   இரண்டாம் ஜாமத்தில் ( இரவு 11.00 முதல் 12.30 மணி வரை )
தென்முகக்கடவுளான தட்சிணாமூர்த்தியை   பின்வருமாறு பொருட்களை கொண்டு வணங்கவேண்டும்.
அபிஷேகம் - பஞ்சாமிர்தம்
அலங்காரம் - குருந்தை
அர்ச்சனை - துளசி
நிவேதனம் - பாயசம், சர்க்கரைப் பொங்கல்
பழம் - பலா
வஸ்திரம் - மஞ்சள் பட்டு
வாசனைதிரவியம் - அகில், சந்தனம்
தூபம் - சாம்பிராணி, குங்குமம்
தீபம் - நட்சத்திரதீபம்
யஜூர் வேதம், கீர்த்தித் திருவகவல் ஓத வேண்டும்

மூன்றாவது ஜாமத்தில் ( அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணி வரை )
  கருவறையின் பின்புறமுள்ள  லிங்கோத்பவரை  பின்வருமாறு பொருட்களை கொண்டு   தரிசிக்கவேண்டும்.
அபிஷேகம் - தேன், பாலோதகம்
அலங்காரம் - கிளுவை, விளா
அர்ச்சனை - மூன்று இதழ் வில்வம், முல்லைமலர்
நிவேதனம் - எள்அன்னம்
பழம் - மாதுளம்
வஸ்திரம் - வெண் பட்டு
வாசனைதிரவியம் - கஸ்தூரி சேர்ந்த சந்தணம்
தூபம் - மேகம், கருங் குங்கிலியம்
தீபம் - ஐந்துமுக தீபம்
சாம வேதம், திருவண்டப்பகுதி ஓத வேண்டும்.

   நான்காம் ஜாமத்தில் ( அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை )
  ரிஷபவாகன சிவனான சந்திரசேகரரை  பின்வருமாறு பொருட்களை கொண்டு  வழிபடவேண்டும்.
அபிஷேகம் - கருப்பஞ்சாறு, வாசனைதிரவியம் கலந்த நீர்
அலங்காரம் - கரு நொச்சி
அர்ச்சனை - நந்தியாவட்டை
நிவேதனம் - வெண்சாதம்
பழம் - நான்கு வித பழங்கள்
வஸ்திரம் - நீலப் பட்டு
வாசனைதிரவியம் - புணுகு சேர்ந்த சந்தணம்
தூபம் - கர்ப்பூரம், இலவங்கம்
தீபம் - மூன்று முக தீபம்
அதர்வண வேதம் , போற்றித்திருவகவல் ஓத வேண்டும்.
   ஒரு சில கோயில்களில் அன்று இரவு முழுவதும் ருத்ர ஜப பாராயணம், தேவாரப் பதிகங்கள் ஆகியவை பாடப்படும்.  ‘சிவபுராண’ உபன்யாசமும் நடைபெறும் அதைக் கேட்கலாம். அல்லது வீட்டிலேயே தேவாரம், திருவாசகம், சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலானவற்றைப் படிப்பதோ அல்லது யாரையாவது படிக்கச் சொல்லியும்  கேட்கலாம்.
வழிபாட்டுப்பலன் :
மஹா சிவராத்திரி தினத்தில்  விரதம் இருந்து  இரவு கண் விழித்து நான்கு ஜாம பூஜைகளால் சிவபெருமானை வழிபட்டால் சகல வளங்களையும் பெற்று வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ முடியும். சிவராத்திரியன்று தம்பதிகளாக இருவரும் சிவலிங்க வழிபாடு செய்தால் இல்லறம் இன்பமயமாக திகழும். இறைவனின் திருவருளால் வளமுடன் வாழ்வார்கள்.
   இந்த நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று சிவனை வழிபட்டால் மன அமைதி,  வாழ்க்கையில் முன்னேற்றம் முதலியவை உண்டாகும். மற்றும் ஓராண்டு சிவ பூஜை செய்த பலனும் கிடைக்கும். முறைப்படி இருபத்து நான்கு வருடங்கள் மஹா சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் மோட்சத்தை அடைவார்கள். அத்துடன் அவர்களின் மூவேழு தலை முறைகளும் நற்கதி அடைவது சத்தியம் என்கிறது புராணங்கள். மஹா சிவராத்திரி அன்று நியம முறைப்படி விரதம் அனுஷ்டித்தால் வாக்குபலிதமும் மந்திர சித்தியும் கூடிவரும் என்பது சித்தர்கள் வாக்கு. சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன் தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவையும்  நம்மை விட்டு நீங்கிப் போகும்.
விஸ்வாமித்தரர், வசிட்டர், அகஸ்தியர் போன்ற சப்தரிஷிகளும் சூரியன் சந்திரன் அக்கினி குபேரன் மன்மதன் விஷ்ணு பிரம்மா ஆகியோரும் மஹா சிவராத்திரி விரதம் இருந்து பேறு பெற்றதாகவும்    கூறப்படுகின்றது.
மஹா சிவராத்திரி விரத மகிமை  பற்றிய ஒரு புராணக் கதையில் சிவராத்திரி தினத்தில் வியாதரன் என்ற வேடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். சிவராத்திரியைப் பற்றி அவனுக்கு எதுவும் தெரியாது.நாள் முழுவதும் அலைந்தும் எந்த மிருகமும் அவனுக்குக் கிடைக்கவில்லை. பசியுடன்  மயக்கமும் ஏற்பட்டு என்ன செய்வது என்று அறியாமலே காட்டை சுற்றி கொண்டிருக்கும் போது இரவும்  வந்துவிட்டது, இரவுப் பொழுது என்பதால் வன விலங்குகளுக்கு அஞ்சி ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்தான் தூக்கம் கண்களை இருட்டியது,  தூங்கிவிட்டால் மரத்தில் இருந்து விழுந்து விடுவோம் என நினைத்து தூங்காமல் இருக்க விடியும்வரை உணவும் இன்றி கண்விழித்திருந்து மரத்திலிருந்த இலைகளை  ஒவ்வொன்றாகப் பறித்துக்  கீழே போட்டுக் கொண்டிருந்தான். அவன் இருந்த மரம் வில்வ மரம். அதன் கீழே ஒரு சிவலிங்கம் இருந்ததை  அறியாமலேயே வில்வ இலைகள் சிவலிங்கத்தின் மீதே விழுந்தன. வேடன் விடிந்ததும் மரத்தில் இருந்து இறங்கி வீடு சென்றான் உண்பதற்கு மாமிச உணவு இல்லாததால் சைவ உணவு உண்டான். வேடன் தன்னை அறியாமலேயே சிவராத்திரி தினத்தன்று உணவும் உறக்கமும் இன்றி சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளால் பூசித்ததால் சிவ பெருமாள்  அருளாளல் முக்தி பெற்று மோட்சத்தை அடைந்தான். வியாதரன் என்ற வேடன் பூஜித்த லிங்கம் ‘வியாதேஸ்வரர்’ என்று பெயர் பெற்றதாக வரலாறு கூறுகிறது.
சிவாயநம என சிந்திப்போருக்கு அபாயம் ஒருபோதும் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு.
தென்னாடுடையை சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க...'  
ஓம் நமசிவாய! ஓம் சிவாய நமஹ!
ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ

Comments

  1. 02.03.2019 - விகடகவி
    https://vikatakavi.in/articles.php?mId=92&aId=16&t=1551481571495

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...